பாலக்காடு,பிப்.18: பாலக்காடு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் நேற்று முன்தினம் இரவு திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர். குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் பயணித்த நான்கு பயணிகளின் உடமைகளை திறந்து பரிசோதனை நடத்தியதில் 40 கிலோ வாசனை திரவியங்கள் இருப்பதை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் இருக்கும். உரிய ஆவணங்கள் இல்லாமல் வடமாநிலத்திலிருந்து கேரளாவிற்கு இவற்றை கடத்தி வந்த அசாமைச் சேர்ந்த ராகுல் இஸ்லாம் (27), அஷல் அகமது (28), முகமது அமீர் (31), முகமது சைபூர் இஸ்லாம் (32) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.