சிவகங்கை, பிப்.17: சிவகங்கை அருகே உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான கிராபைட் ஆலை ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளதால் அவர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். சிவகங்கை அருகே கோமாளிபட்டி சேந்திஉடையநாதபுரத்தில் தமிழ்நாடு அரசிற்கு சொந்தமான கிராபைட் கனிம நிறுவனம்(டாமின்) உள்ளது. கிராபைட் கனிமம் சுமார் 900 ஏக்கர் பரப்பளவில் கோமாளிபட்டி, தேவனிப்பட்டி, ஊகுளத்துப்பட்டி, கண்டாங்கிபட்டி, புதுப்பட்டி, காரம்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இப்பகுதி கிராம எல்லைவரை பரவியுள்ளது. 1994ம் ஆண்டு இயங்க தொடங்கிய இந்த ஆலையில் நிலத்தில் உள்ள கல்லை வெட்டியெடுத்து அதிலிருந்து கிராபைட்டை பவுடராக பிரித்து எடுக்கும் பணி நடக்கிறது. கிரேடு வாரியாக உள்ள கிராபைட் பெயிண்ட், குருசுபுல்(தங்கம், இரும்பு உள்ளிட்ட உலோகங்களை உருக்க பயன்படும் உலை), ராக்கெட், ஏரோப்ளேன், ஹெலிகாப்டர் உள்ளிட்ட அதிக வெப்பநிலை தாங்கும் பொருட்கள் தயார் செய்ய பயன்படுகிறது. இங்கு தயார் செய்யப்படும் கிராபைட் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.