ஊட்டி, பிப். 17: கோத்தகிரி அருகே உயிலட்டி பகுதியில் விவசாய நிலத்தை ஒட்டியுள்ள பகுதியில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க புலி ஒன்று சிக்கியது.
கோத்தகிரி வனச்சரகத்திற்குட்பட்ட உயிலட்டி பகுதியில் தேயிலை தோட்டம் மற்றும் காய்கறி விவசாய நிலத்தை ஒட்டி ஓடை பகுதி அருகே பாதுகாப்பு வேலியில்சிக்கிய நிலையில் புலி ஒன்று படுத்திருந்ததை பார்த்த மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின் பேரில் நீலகிரி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் குருசாமி, உதவி வன பாதுகாவலர் சரவணகுமார் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது 3 வயது மதிக்கத்தக்க புலி என்பதும், அதன் முன்னங்கால் பாதுகாப்பு வேலியில் சிக்கியிருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து புலிக்கு மயக்க மருந்து செலுத்தி சுருக்கில் இருந்து விடுவிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.