கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வலை பாதுகாப்பில் மலர் நாற்றுகள் பனியில் கருகாமல் இருக்க ஏற்பாடு

கொடைக்கானல், பிப். 13: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பனியில் கருகாமல் இருக்க மலர் நாற்றுகளுக்கு பாதுகாப்பு வலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது வரை பனி கொட்டி வருகிறது. இந்த குளிரின் காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் மரங்கள், பூக்கள், புல்வெளிகள் அனைத்தும் கருகி வருகின்றன. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வரும் கோடை விழா மலர் கண்காட்சியையொட்டி புதிதாக பல ஆயிரம் மலர் நாற்றுகள் நடப்பட்டிருந்தன. இவை பனியில் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மலர் நாற்றுகள் கருகாமல் இருக்க பாதுகாப்பு வலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் பகலில் மலர் நாற்றுகளில் வெயில் படும் விதமாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலை துறையினர் கூறியதாவது, ‘இரவு நேரங்களில் அதிகபட்ச குளிர் காரணமாக இளம் தளிர் மலர் நாற்றுகள் கருகி விடும் அபாயம் உள்ளது. இதனால் வரும் கோடை விழாவில் மலர் நாற்றுகள் தயாராகாமல் போய் விடும். இதை கருத்தில் கொண்டுதான் வலைகள் அமைத்து மலர் நாற்றுகளை பாதுகாத்து வருகிறோம். பனியின் தாக்கம் குறைந்தவுடன் இந்த வலைகள் அகற்றப்பட்டு விடும்’ என்றனர்.

Related Stories: