கரூர், பிப்.13: கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் விடுத்துள் செய்திக்குறிப்பு: பிரதம மந்திரியின் விவசாயி கவுரவ நிதித்திட்ட பயனாளிகளுக்கு உழவர் கடன் அட்டையை வழங்குவதற்காக சிறப்பு பிரசாரம் மத்திய அரசால் துவங்கப்பட்டுள்ளது. இந்த பிரசாரத்தின் மூலம் பெரும்பான்மையான விவசாயிகளுக்கு 15 நாட்களுக்குள் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது. இந்த கடன் அட்டையை பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் விவசாய சேமிப்புத்திட்ட கணக்கு உள்ள வங்கிக் கிளையை அணுகி உழவர் கடன் அட்டையைப் பெற்று மானிய சலுகையுடன் வங்கிக்கடன் பெறலாம், உழவர் கடன் அட்டையை ஏற்கனவே பெற்றுள்ள விவசாய பயனாளிகள் தங்களின் வங்கிக் கிளையை அணுகி கடன் தொகையின் வரம்பினை உயர்த்த விண்ணப்பிக்கலாம். செயல்படாத உழவர்கடன் அட்டை உள்ளோர் வங்கி கிளையை அணுகி கடன் அட்டையை செயல்படுத்தவும், புதிக கடன் வரம்பிற்கு அனுமதியும் பெறலாம்.