பழநி, பிப். 12: பழநி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாளை இரவு சண்முகநதிக்கு சேலம் எடப்பாடி பக்தர்கள் வருகின்றனர். பழநி தைப்பூச திருவிழாவிற்கு வருகை தரும் பிரசித்தி பெற்ற காவடி குழுக்களில் சேலம் மாவட்டம், எடப்பாடி பருவத ராஜகுல தைப்பூச காவடிகள் ஒன்றாகும். கடந்த 350 ஆண்டுகளுக்கு மேலாக பருவத ராஜகுல காவடி குழுவினர் பழநி கோயிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இக்குழுவினருக்கு மட்டுமே இரவு நேரமும் பழநி மலைக்கோயிலில் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இக்குழுவினர் தைப்பூசம் முடிந்த பின்னரே பழநி கோயிலை வந்தடைவர். இக்குழுவினர் நாளை நள்ளிரவு மானூர் ஆற்றங்கரைக்கு வர உள்ளனர்.நாளை மறுதினம் சண்முகநதி ஆற்றங்கரையில் குளித்து முடித்து விட்டு அன்று முழுவதும் மலைக்கோயிலில் தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து முருகனுக்கு படைத்து வழிபாடு நடத்துவர். பின், அப்பஞ்சாமிர்தத்தை காவடிக்குழுவினர் பகிர்ந்து கொள்வர். தற்போது சேலம் மாவட்டம் வலசைபழைய பேட்டை, புதுப்பேட்டை, கவுண்டம்பட்டி, சின்னமணலி, இடைப்பாடி, க.புதூர் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த காவடி குழுவினர் பழநிக்கு வருவர். இவர்கள் கல்லம்பாளையம், எல்லப்பாளையம், ஈரோடு, பரமத்திபேலூர், காவேரியாறு, காங்கேயம், வட்டமலை, சென்னிமலை, நொய்யலாறு, நல்லிமடம், தாராபுரம் வழியாக பழநி அருகே மானூர் சண்முகநதி ஆற்றுக்கு சுமார் 250 கிலோமீட்டர் பாதயாத்திரையாக வருவர்.