கோவை, பிப். 12: மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை ஆன்லைனில் சந்தைப்படுத்தும் வகையில் கோவை மாவட்டத்தில் 13 மகளிர் சுய உதவிக் குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களை தொழில்முனைவோர்களாக மாற்றும் நோக்கத்தில் கடன் உதவிகள் பெற்றுத் தரப்படுகிறது. இந்நிலையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் வகையில் (பிளிப்கார்ட்) தனியார் ஆன்லைன் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழகத்தில் இத்திட்டம் கூடிய விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. கோவை மாவட்டத்தில், ஆன்லைனில் சந்தைப்படுத்தும் திட்டத்தில் முதல்கட்டமாக துணிவகை பொருள்களை தயாரிக்கும் 13 மகளிர் குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.