தனித்தனி சம்பவம் பெண்களை தாக்கிய 3 பேர் கைது

உளுந்தூர்பேட்டை,  பிப். 12: உளுந்தூர்பேட்டை அருகே கல்லமேடு கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன்  மனைவி ஜெயலட்சுமி (27). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த  இதே கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம், அவரது மனைவி ராஜவள்ளி, உறவினர்  வளையாபதி ஆகிய 3 பேரும் சேர்ந்து தகராறில் ஈடுபட்டு அசிங்கமாக திட்டி  ஜெயலட்சுமியை ஜல்லிக்கரண்டியால் தலையில் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல்  விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் படுகாயம் அடைந்த ஜெயலட்சுமிக்கு  உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக திருநாவலூர்  காவல்நிலையத்தில் ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ராஜவள்ளி உள்ளிட்ட 3பேர் மீதும் சப்இன்ஸ்பெக்டர்  பாரதி வழக்கு பதிந்து ராமலிங்கம்(43), வளையாபதி(40)  ஆகியோரை கைது செய்தார்.

மற்றொரு சம்பவம்: உளுந்தூர்பேட்டை  பேரூராட்சி சிவகுருநாதன் தெருவில் வசித்து வருபவர் ராகினி(40). இவருக்கும்  இதே பகுதியில் வசித்து வரும் பாண்டியன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல்  வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த பாண்டியன் மற்றும்  அவரது மனைவி செல்வராணி, மகன் அருண், உறவினர் வள்ளி உள்ளிட்ட 4 பேரும்  சேர்ந்து அசிங்கமாக திட்டி ராகினியை கத்தியால் கிழித்து தாக்கியதாக கூறப்படுகிறது.  இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் ராகினி கொடுத்த  புகாரின் பேரில் 4 பேர் மீதும் சப்இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் வழக்கு பதிந்து, பாண்டியனை (60) கைது செய்தார்.

Related Stories: