ரெட்டியார்பாளையத்தில் கட்டிட பொறியாளர் மாயம்

புதுச்சேரி, பிப். 12: புதுவை உழவர்கரை மடத்து வீதியில் வசிப்பவர் பிஸ்கோத் சூசைநாதன். இவரது மகன் பிஸ்கோத் செல்வராஜ் (29). பொறியியல் பட்டதாரியான இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை. இதனிடையே செல்வராஜ் கட்டிட காண்ட்டிராக்ட் எடுத்து தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் இறுதியில் தனது அக்காள் மேரி ஜாக்குலினிடம் வேலை நிமித்தமாக வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு வந்தவர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. வழக்கம்போல் வேலைக்காக வெளியில் தங்கிவிட்டு செல்வராஜ் வீடு திரும்புவார் என்பதால் பெற்றோரும் அதை பெரிதுபடுத்தாமல் இருந்துள்ளனர்.

பின்னர் ஒருவாரம் கழித்து அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கவே அதிர்ச்சியடைந்தனர். பின்னர் செல்வராஜை பல இடங்களில் தேடி உறவினர்கள் அலைந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து தனது தம்பியை காணவில்லை என மேரி ஜாக்குலின், ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார். எஸ்ஐ வீரபத்திரன் தலைமையிலான போலீசார் மிஸ்சிங் பிரிவில் வழக்குபதிந்து மாயமான செல்வராஜை தேடி வருகின்றனர். மேலும் அவரை தொழில் போட்டி தகராறில் யாராவது கடத்தினார்களா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

Related Stories: