பாடாலூர், பிப் 11: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்த சோளப்பயிர் எரிந்து நாசமானது. ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே உள்ள நக்கசேலம் கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் மகன் இளங்கோவன். விவசாயி. இவர் தன்னுடைய மானாவாரி நிலங்களில் மாடுகளின் தீவனத்திற்காக சோளம் விதைத்து இருந்தார். அந்த நிலத்தில் சோளப் பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தது. இந்நிலையில் அந்த சோளப் பயிர்கள்
நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவலறிந்த துறையூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இந்த சோள பயிருக்கு யாராவது தீ வைத்தார்களா ? அல்லது யாரேனும் புகை பிடித்து விட்டு தூக்கி வீசி எரிந்ததால் தீ பிடித்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வருவாய் ஆய்வாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.