ஈரோடு, பிப்.11: ஈரோடு வெண்டிபாளையம் ரயில்வே கேட்டில் சப்-வே கட்டுமான பணிகள் மந்தமாக நடந்து வருவதால், அப்பகுதி வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஈரோடு பழைய கரூர் ரோட்டில் வெண்டிபாளையம் செல்லும் வழியில் இரண்டு ரயில்வே கிராசிங்குகள் உள்ளன. இந்த 2 ரயில்வே கிராசிங்குகள் வழியாக, ஈரோட்டில் இருந்து சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களுக்கும், ஈரோடு மார்க்கமாக பல்வேறு மாநிலத்தில் இருந்து கோவை மற்றும் கேரளா செல்ல 60க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரயில்வே கேட்களின் இடைப்பட்ட பகுதியில்தான் வெண்டிபாளையம், மோளகவுண்டன்பாளையம், லோகநாதபுரம் உள்ளிட்ட ஊர்கள் உள்ளன. ரயில்கள் இந்த ரயில்வே கிராசிங்குகள் வழியாக செல்லும்போது ரயில்வே கேட் பூட்டப்படும். ஒவ்வொரு ரயிலும் கேட்டை கடக்கும் வரை சுமார் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.