திட்டக்குடி, பிப். 6: இடைத்தரகர்கள் மூலம் விற்பனை நடைபெறுவதாக வந்த புகாரையடுத்து திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது இனி தவறுகள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். திட்டக்குடியில் இயங்கும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இடைத்தரகர்கள் மூலம் விற்பனை நடைபெறுவதாக பெறப்பட்ட புகாரின் பேரில் திட்டக்குடி வட்டாட்சியர் நேரடி ஆய்வு மேற்கொண்டார். திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சோளம், வரகு, கம்பு போன்ற பயிர் வகைகள் விற்பனைக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு விவசாயிகள் கொண்டும் வரும் பயிர் வகைகளை இடைத்தரகர்கள் தலையிட்டு அவற்றை முழுமையாக பெற்று விற்பனை செய்வதாகவும். இதனால் அரசு நிர்ணயித்த விலையைவிட குறைவாக விவிசாயிகளுக்கு வழங்கப்படுகிறது எனவும், எடை போடும்போது ஒவ்வொரு மூட்டைக்கும் சுமார் 3 கிலோ முதல் 4 கிலோ வரை குறைத்து எடை போடுவதாகவும் புகார்கள் பெறப்பட்டன.