காரைக்கால், பிப். 4: புதுச்சேரி கலை மற்றும் விளையாட்டு விழா நிறைவு நாள் நிகழ்ச்சியாக, கல்லூரி மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இதில், முதல் மற்றும் மூன்றாம் இடத்தை ஏனாம் கல்லூரி மாணவிகள் பிடித்தனர். புதுச்சேரி கலை மற்றும் விளையாட்டு விழாவை, கடந்த 1ம் தேதி காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். நிறைவு நாள் நிகழ்ச்சியாக, மாநில அளவிலான கல்லூரி மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி நேற்று காரைக்கால் அரசு விளையாட்டு திடலில் தொடங்கியது. இப்போட்டியை அமைச்சர் கமலக்கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில், அசனா எம்எல்ஏ, துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ், முதன்மை கல்வி அதிகாரி அல்லி, அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் பாலாஜி, மேல்நிலைக்கல்வி துணை இயக்குனர் கோவிந்தராஜன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.