வத்திராயிருப்பு, பிப். 4: வத்திராயிருப்பில் தண்ணீர் இல்லாததால் இரண்டு கழிப்பறைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். வத்திராயிருப்பில் உள்ள மறவர் வடக்குத்தெருவில் இரண்டு கழிப்பறைகள் உள்ளன. இந்த கழிப்பறைகளை 150க்கு மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கழிப்பறைகளுக்கு தண்ணீர் வசதியில்லாமல், 15 நாட்களுக்கு மேலாக பூட்டிக் கிடக்கிறது. இதனால், பொதுமக்கள் திறந்தவெளியை பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் இரண்டு கழிப்பறைகளுக்கும் போர்வெல் அமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.