பெரியகுளம், பிப்.4: பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு அண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், செட் பவுண்டேசன் ஆகிய அமைப்புகளின் சார்பாக பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. பெரியகுளம் நியூ கிரவுண்டில் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்றது. 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், குண்டு எறிதல், கூடைப்பந்து, கைப்பந்து, கபாடி, பேட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அனைத்து மக்களுக்குமான மாரத்தான் போட்டிகள் நடைபெற்றன. இதில் 800க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். 13வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு குழாய்த்தொட்டியிலிருந்து 3 கிமீ தூரமும், ஆண்கள் மற்றும் 15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கான மாரத்தான் சோத்துப்பாறை அணையிலிருந்து 8 கி.மீ தூரமும் ஓடினர்.