உடுமலை, பிப். 4: உடுமலை பருத்தி ஆராய்ச்சி பண்ணையில் உகாண்டா நாட்டு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். கோவை தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சீமா), பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி கழகம் மற்றும் உகாண்டா நாட்டுடன் இணைந்து பருத்தி ஆராய்ச்சியில் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. புதிய ரகங்கள், அதிக மகசூல், அரவைத்திறன் கொண்ட பருத்தி ரகங்களை பரிமாற்றம் செய்து ஆராய்ச்சியின் அடிப்படையில் புதிய பருத்தி விதைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதன்படி, உகாண்டா நாட்டு பிரதிநிதிகள் குழு மரபியல் வல்லுநர் மார்ட்டின் ஓராவு தலைமையில் லஸ்டஸ் செருன்ஜோகி கடன்டே, பிளஸ் எலோபு, ஹரியட் அகிரோர், ஒகேபால், மிலன் சர்மா ஆகியோர் கொண்ட குழுவினர், உடுமலை அருகே பொன்னேரியில் உள்ள சீமாவின் பருத்தி ஆராய்ச்சி பண்ணைக்கு வந்தனர். உடுமலை பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பருத்தி வயல்களையும் பார்வையிட்டனர். இதில் சீமா நிறுவனத்தின் சார்பில் மரபியல் வல்லுநர் ஆஷாராணி, ஆராய்ச்சி அலுவலர் முத்துசாமி ஆகியோர் குழுவினருக்கு விளக்கம் அளித்தனர். விதை உற்பத்தி தொழில் நுட்பங்களை உகாண்டா குழுவினர் கேட்டறிந்தனர். உகாண்டா சீதோண்ண நிலைக்கு உரிய பருத்தி விதைகளை குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.