பாலத்தில் இருந்து குதிக்க முயன்ற வாலிபர்

கோவை, ஜன.31: கோவை உக்கடம்-சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள பாலத்தில் இருந்து குதிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. உக்கடம்-சுங்கம் பைபாசில் கடந்த சில நாட்களாக சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுற்றித்திரிகிறார். பார்ப்பதற்கு வடமாநிலத்தை சேர்ந்த நபர்போல தெரியும் இவர் நேற்று மதியம் சுங்கம் பைபாசில் உள்ள பாலத்தில் இருந்து திடீரென கீழே குதித்தார். அப்போது அவர் பாலத்துக்கும்-தரைக்கும் இடையே உள்ள கான்கிரீட் சிலாப்பில் சிக்கி கொண்டார். இதனை பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். அந்த வாலிபரால் அங்கிருந்து கீழே இறங்க முடியவில்லை, மேலேயும் ஏற முடியவில்லை. மேலும் அவர் அங்கிருந்த சிறிய கற்களை எடுத்து மக்கள் மீது வீசினார். இது குறித்து உக்கடம் போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த வாலிபரை கயிறு கட்டி மீட்டனர். அந்த வாலிபர் மன நிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: