கடையம், ஜன. 29: கடையம் அய்யம்பிள்ளை குளம் பகுதியில் கொட்டப்பட்டு வரும் கோழி கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. கடையத்தில் இருந்து முதலியார்பட்டி செல்லும் வழியில் அய்யம்பிள்ளை குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த குளத்தின் கரையில் பிராய்லர் கோழி மற்றும் இறைச்சி கழிவுகள் சாக்கு பைகளில் நிரப்பி கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த கழிவுகள் நிரம்பிய சாக்குபையை நாய்கள் கிழித்து குளக்கரை முழுவதும் கழிவுகளை சிதறடிக்கின்றன. மேலும் அவற்றை தின்று குளத்து தண்ணீரில் உருண்டு புரளுகிறது. இந்த குளத்தில்தான் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடு, மாடுகளும் தாகம் தீர்க்கின்றன.தொடர்ந்து குவிக்கப்படும் இறைச்சி கழிவுகளால் சுற்றுப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. இப்பகுதியில் திரியும் நாய்களும் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி சுகாதாரத்தை கெடுக்கின்றன.