பரமத்திவேலூர், ஜன.28: பரமத்தி நகருக்குள் வராமல் பைபாஸ் சாலையில் சென்ற தனியார் பஸ்களை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி நகரம் உள்ளது. இங்கு பல்வேறு அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. பரமத்தியில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர், கல்வி மற்றும் பணி நிமித்தம் வெளியூர்களுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் தனியார் பஸ்களில், பரமத்தி செல்லும் பயணிகளை ஏற்ற கண்டக்டர்கள் மறுக்கின்றனர். மேலும், இந்த பஸ்கள் பரமத்தி நகருக்குள் வராமல், பைபாஸ் (புறவழி) சாலையில் செல்வதால், பரமத்திக்கு வரும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதேபோல், ஒருசில அரசு பஸ்களும் பரமத்தி நகருக்குள் வராமல் புறவழிச்சாலையில் செல்கின்றன. இதனால், பரமத்தியிலிருந்து நாமக்கல், கரூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள், பஸ் இல்லாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு நாமக்கல்லில் இருந்து பரமத்திக்கு வரவேண்டிய சில பயணிகள், தனியார் பஸ்சில் ஏறியுள்ளனர். அப்போது, பரமத்தி நகருக்குள் பஸ் செல்லாது என கூறிய கண்டக்டர், அவர்களை பஸ்சிலிருந்து இறக்கி விட்டதாக தெரிகிறது.