காஞ்சிபுரம். ஜன.28: தமிழ்நாடு ஒருங்கிணைந்த கல்வி மூலமாக பள்ளி பரிமாற்றுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்களின் திறன்களை படைப்பாற்றலை பகிர்ந்துக்கொள்ளும் வகையில் ஊரகப்பபுற மாணவர்கள் நகர்புற பள்ளிகளுக்கும், அதேபோன்று நகர்ப்புற மாணவர்கள் ஊரகப்புற பள்ளிகளுக்கும் சென்று அங்கு நடைபெறும் பள்ளி மற்றும் கல்வி செயல்பாடுகளை பார்வையிடுவர். அப்பகுதியில் உள்ள சிறப்புகளையும் வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளுக்கும் சென்று சிறப்புகளை அறிந்துக் கொள்வர். இத்திட்டம் காஞ்சிபுரம் ஒன்றியம் மற்றும் நகராட்சியில் உள்ள நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் என 36 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள நகர்ப்புற பள்ளியான யாகசாலை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இருந்து 20 மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை வெரோனிகா மேரி, கணித ஆசிரியை பிரேமலதா ஆகியோர் காஞ்சிபுரம் அடுத்த ஊரகப் பள்ளியான அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சென்றனர்.