தூத்துக்குடி, ஜன.24: தூத்துக்குடி தெற்குமாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:திமுக சார்பில் ஆண்டுதோறும் ஜன.25ம்தேதி மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தை எழுச்சியுடன் நடத்திட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில், மாப்பிள்ளையூரணி ஊராட்சி, சிலுவைப்பட்டி விலக்கில் நாளை 25ம்தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அருண்குமார் தலைமை வகிக்கிறார். தூத்துக்குடி ஒன்றிய தலைவர் வசுமதி அம்பாசங்கர் முன்னிலை வகிக்கிறார். மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவர் சரவணக்குமார் வரவேற்கிறார். இதில் திமுக நாடாளுமன்ற குழு துணைத்தலைவரும், மகளிரணி செயலாளருமான கனிமொழி எம்பி, மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.