ஊட்டி, ஜன. 23:தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் சுற்றுலா விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்பட்டது.
ஊட்டியில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு துவக்கி வைத்து பேசியதாவது, தமிழக அரசின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் சுற்றுலா விழிப்புணர்வு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (நேற்று) 150 பள்ளி மாணவ, மாணவிகளை மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களின் முக்கியத்துவம், வரலாறு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அரசுப் பள்ளிகளிலிருந்து படிப்பில் சிறந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகள் குறிப்பாக பழங்குடியின மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஊட்டி அரசு அருங்காட்சியகம், அரசு தாவரவியல் பூங்கா, ஸ்டீபன் சர்ச், காஸ்மிக் ஆராய்ச்சி மையம் மற்றும் ரேடியோ அஸ்ட்ரானமி சென்டர் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள் என்றார்.