பழநி, ஜன. 23: பழநியில் செல்போன் பார்த்தபடியே பஸ் ஓட்டியதால் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்ட டிரைவர், சென்னை பஸ்சை ஓட்டிய நிலையில் பயணிகள் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழநியில் இருந்து திண்டுக்கல் செல்லும் தனியார் பஸ்சின் டிரைவராக இருந்தவர் ராமகிருஷ்ணன். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் செல்போனை பார்த்தபடியே சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக பஸ்சை ஓட்டினார். அப்போது பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் டிரைவரின் இச்செயலை செல்போனில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ பதிவு வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதன் காரணமாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ராமகிருஷ்ணனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்திருந்தனர்.