சேந்தமங்கலம், ஜன.23: பேளுக்குறிச்சி பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சேந்தமங்கலம் ஒன்றியம் பேளுக்குறிச்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தினசரி பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் ஏராளமானோர் ராசிபுரம், நாமக்கல், காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும், கொல்லிமலை, ஐந்துநாடு ஆகிய பகுதிகளில் விளையும் பொருட்களை, விவசாயிகள் தலைச்சுமையாக பழனியப்பர் கோயில் வழியாக பேளுக்குறிச்சிக்கு கொண்டு வந்து, பின்பு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு பஸ்களில் கொண்டு செல்கின்றனர்.