கிருஷ்ணகிரி, ஜன.23: கிருஷ்ணகிரி மாவட்டம் எண்ணேகொல் தடுப்பணையில் இருந்து புதிய கால்வாய் அமைக்கும் திட்டத்தினை விரைந்து செயல்படுத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சென்னைய நாயுடு, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரசந்திரம் தடுப்பணையில் இருந்து படேதலாவ் ஏரிக்கு மழைக்காலங்களில் தண்ணீர் வந்து, ஏரி நிரம்பியது. ஏரி நீரை நம்பி பர்கூர் ஒன்றியத்தை சேர்ந்த விவசாயிகள், படேதலாவ் ஏரிக்கு கிழக்கே உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் சென்றடையும் வகையில் புதிய கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று 2005ம் ஆண்டு படேதலாவ் ஏரி முதல் காட்டாகரம் ஏரி வரை 11 ஏரிகளை இணைக்கும் வகையில் புதிய கால்வாய் அமைக்கும் பணி துவங்கி, 2009ம் ஆண்டு முடிக்கப்பட்டது. ஆனால், படேதலாவ் ஏரிக்கு தண்ணீர் வர வழியில்லாததால் ஏரி வறண்டு காணப்படுகிறது.