பணகுடி, ஜன. 21: விசைப் படகு மீனவர்கள் தங்குகடலுக்கு செல்வதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெல்லை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். நெல்லை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சங்க தலைவர் எரிக்ஜூட் தலைமையில் உவரி ரைமண்ட், கூத்தன்குழி ராஜா மற்றும் மீனவ சங்கத்தினர், நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீசிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த அக்டோபர் 11ம் தேதி சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அலுவலகத்தில் கன்னியாகுமரி விசைப்படகு மீனவர்களுக்கும், நெல்லை நாட்டுப்படகு மீனவர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் தங்குகடல் செல்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது 1983ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மீன்பிடி சட்டத்தின் அடிப்படையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.