அம்பை, ஜன. 21: அம்பை வட்டாரத்தில் நடந்த வேளாண் திட்ட பணிகளை சென்னை வேளாண் இயக்குநர் மற்றும் மண்டல அலுவலர் சுந்தரம் கள ஆய்வு மேற்கொண்டார். கல்லிடைக்குறிச்சி அருகே ஜமீன் சிங்கம்பட்டி கிராமத்தில் அங்கக பண்ணையம் செயல்விளக்கத் திடலினை பார்வையிட்டு இயற்கை விவசாயம் செய்வதுடன் அங்கக பண்ணையமாக சான்றளிப்பு துறையில் பதிவு செய்து நெல்லினை அதிக விலையில் விற்பனை செய்யவும் சில்பாலின் பை கொண்டு மண்புழு உரம் தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார். மேலும் அயன்சிங்கம்பட்டி கிராமத்தில் இசக்கிமுத்து என்பவரது வயல் மற்றும் அதைச் சுற்றி 55 ஏக்கர் பரப்பில் இயந்திரம் மூலம் நடவு செய்யப்பட்டிருந்த வயல்களில் கோனோவீடர் கொண்டு களை எடுக்கும் பணிகளை ஆய்வு செய்தார். நெல் வயல்களில் கோனோவீடர் பயன்படுத்துவதால் களைகள் கட்டுப்படுத்தப்படுவது மட்டுமின்றி மகசூல் அதிகரிக்கும் என்ற விவரத்தை விவசாயிகளிடம் எடுத்து கூறினார். அதேபோல் வி.கே.புரம் அருகே உள்ள அனவன்குடியிருப்பு கிராமத்தில் உள்ள அனுசரனை ஆராய்ச்சி திடல்களை ஆய்வு செய்து அத்திடல்களில் நடவு செய்யப்பட்டிருந்த நெல் வித்துகளின் குணாதிசயங்களை பற்றி விவசாயிகளிடம் கேட்டறிந்தார். அந்த ஆராய்ச்சி திடல்களில் நடப்பட்டிருந்த மூன்று நெல் வித்துகளில் தனித்தனியாக மகசூல் கணக்கிட ஆலோசனை கூறினார். பின் மேல ஏர்மாள்புரத்தில் இயந்திர நடவு மூலம் நடவு செய்யப்பட்டிருந்த ஆடுதுறை 45 நெல் விதைப் பண்ணை வயல்களை பார்வையிட்டு நெல் விதைப் பண்ணைகளிலிருந்து அதன் இலக்குபடி நெல் கொள்முதல் செய்ய அறிவுரை வழங்கினார் . ஆய்வின் போது அம்பை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கற்பக ராஜ்குமார், வேளாண்மை அலுவலர் மாசானம், துணை வேளாண்மை அலுவலர் முருகன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் உடனிருந்தனர். ஏற்பாடுகளை அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுஜித், உதவி தொழில்நுட்ப மேலாளர் சரவணன், உதவி வேளாண்மை அலுவலர்கள் சாந்தி, காசிராஜன், விஜய லெட்சுமி, பார்த்தீபன் மற்றும் சாமிராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.