கோவை, ஜன.20: பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து கோவைக்கு வந்தவர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடந்த 14ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பலர் தங்களின் சொந்த ஊருக்கு சென்றனர். பல்வேறு ஊர்களில் இருந்து கோவைக்கும் வந்தனர். இந்நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகிறது. இதனால், கோவைக்கு வந்தவர்கள் தங்களின் ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். குறிப்பாக, கோவையில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிக்கு செல்ல 40க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டது. இதில், தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக, கோவையில் இருந்து சென்னைக்கு ஏசி படுக்கை வசதியுடன் கூடிய பஸ்களில் ஒரு நபருக்கு ரூ.1,550 முதல் ரூ.2,500 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. ஏசி பஸ்களில் சீட் ரூ.1,300 முதல் ரூ.1500 வரையும், ஏசி இல்லாத சீட் ரூ.999 முதல் ரூ.1,500 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. மேலும், கோவையில் இருந்து பெங்களூருக்கு ரூ.1,100 முதல் ரூ.2000 வரை விற்பனை செய்யப்பட்டது.