திருவண்ணாமலை, ஜன.20: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப மை நேற்று முதல் விற்பனைக்கு வந்தது. இதனை பக்தர்கள் ₹10 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 10ம் தேதி நடந்தது. அன்று அதிகாலை 4 மணியளவில் கோயிலினுள் பரணி தீபமும், அன்று மாலை 6 மணியளவில் கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயரமலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. இதனை காண இந்தியா முழுவதும் இருந்து 25 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்தனர். இந்த தீபமானது தொடர்ந்து 11 நாட்கள் மலையில் பிரகாசித்தது. அதைத்தொடர்ந்து மலையில் இருந்து தீப கொப்பரை கீழே இறக்கப்பட்டு, கோயிலில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.