பெரியார் குறித்து அவதூறு கருத்து ரஜினி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தர்பார் திரையரங்குகள் முன்பு போராட்டம்

கோபி, ஜன.19: தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் நோக்கில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தர்பார் திரைப்படம் ஓடும் திரையரங்குகள் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் விடுதலை கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில செயலாளர் ராம.இளங்கோவன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கந்தசாமி ஆகியோர் கோபி காவல் நிலையத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:சென்னையில் துக்ளக் இதழின் 50ம் ஆண்டு விழா கடந்த 14ம் தேதி நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், கடந்த 1971ம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த பேரணியின்போது ராமர், சீதை ஆகியோரின் உருவங்கள் நிர்வாணமாக எடுத்து செல்லப்பட்டதாக பொய்யான தகவலை பேசினார்.  நடிகர் ரஜினிகாந்த் தனது சுய லாபத்திற்றகாக தரக்குறைவாக பேசி வருகிறார்.

இவரது பேச்சால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர் பேசிய வார்த்தைகளை திரும்ப பெறுவதோடு மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அவரது நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் ஓடும் திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: