தா.பேட்டையில் வேளாண் அதிகாரி மர்மச்சாவு

தா.பேட்டை, ஜன.19: தா.பேட்டை பிள்ளாதுரை நெசவாளர் காலனியில் வசிப்பவர் மணி. இவரது மகன் சதீஷ்குமார்(29). இவர் தா.பேட்டை வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில் தற்காலிக உதவி வேளாண் அலுவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று தா.பேட்டையிலிருந்து துறையூர் செல்லும் சாலையில் மெயின் ரோட்டில் ஆராய்ச்சி சமத்துவபுரம் அருகே காலை நேரத்தில் நடைபயிற்சிக்கு சென்றவர் தலையில் பலத்த காயங்களுடன் நினைவிழந்த நிலையில் சாலையின் ஓரத்தில் கிடந்துள்ளார். அப்பகுதி வழியாக சென்றவர்கள் சதீஷ்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் இறந்தார். தகவலறிந்த தா.பேட்டை போலீசார் சதீஷ்குமார் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சதீஷ்குமார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றதா அல்லது யாராவது தாக்கியதால் சதீஷ்குமார் படுகாயமடைந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: