வாடகைக்கு வீடு பார்ப்பது போல் மூதாட்டியிடம் 8 பவுன் பறிப்பு

 

திருச்சி, ஜூலை 28: திருச்சி டிவிஎஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரா (80). இவரது மகன் சென்னையில் தங்கி வக்கீலாக பணிபுரிகிறார். மூதாட்டி வீட்டின் மாடியில் கல்லூரி மாணவர்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் தினமும் (ஸ்விக்கி) மூலம் இவருடைய மகன் உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்நிலையில், ஜூலை 26ம் தேதி இவருடைய வீட்டுக்கு (ஸ்விக்கி) விநியோக நிறுவன உடை அணிந்துகொண்டு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்துள்ளார். அவரிடம் விசாரித்தபோது வீடு வாடகைக்கு கேட்டு வந்துள்ளதாகக் கூறினார். இதையடுத்து, மூதாட்டி வீட்டில் குடியிருந்த கல்லூரி மாணவரை வரவழைத்து அவரை அங்கிருந்து அனுப்பி உள்ளார்.

இந்நிலையில்,நேற்று மதியம் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தபோது வந்த அந்த வாலிபர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச்செயினை பறித்துச் சென்றார். இதுகுறித்து மூதாட்டி அளித்த புகாரின்பேரில், கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து அருகிலுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாநகர துணை கமிஷனர் மணிகண்டன், உதவி கமிஷனர் கென்னடி, கே.கே நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி உள்ளிட்டோர் மூதாட்டியின் வீட்டில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Stories: