திருச்சி, ஜூலை 28: திருச்சி ஆவினில் இருந்து கூடுதலாக சென்னைக்கு பால் அனுப்பப்படுவதால் உள்ளூர் ஆவின் நுகர்வோருக்கு போதிய அளவு பால் கிடைக்காத நிலையுள்ளதால், விற்பனை முகவர்கள் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களும் அவதிக்குள்ளாவதால், தட்டுப்பாடின்றி பால் கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிபடுத்த வலியுறுத்தி ஆவின் பால் முகவர்கள் நேற்று மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். திருச்சி மாநகர பகுதி மட்டுமின்றி மாவட்டத்தின் மற்ற பகுதிகளுக்கும ஆவின் பாலின் தேவை அதிகமாக உள்ளது. இந்நிலையில் ஆவின் நிர்வாகம் அதன் முகர்வர்களுக்கு வழங்கும் பால் அளவானது, வாடிக்கையாளர்களின் முழுத்தேவையையும் பூர்த்தி செய்ய இயலாத வகையில் உள்ளது என்றும், ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆவின் பால் முகவர்கள் ஒற்றுமை நல சங்க நிர்வாகிகள் ஒன்று திரண்டு வந்து, திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பிரத்திக் தயாளிடம் புகார் மனு அளித்த சம்பவம் கவனத்துக்குள்ளானது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் சிவக்குமார், துணைத்தலைவர் தியாகராஜன், செயலாளர் சண்முகநாதன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் இஸ்மாயில் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டாக அளித்த பேட்டி: முகவர்களாகிய எங்களுக்கு தினந்தோறும், வினியோகிக்கும் பால் துவக்கத்தில் சிறிய அளவே குறைக்கப்பட்டது. நாளடைவில் இதன் அளவு அதிகரிக்க துவங்கியது. இதுகுறித்து ஆவின் பொது மேலாளரை அணுகி கூறியபோது, சில தினங்களில் நிலைமையை சரிசெய்வதாக சங்க நிர்வாகளிடம் தெரிவித்தனர். ஆனால் இப்போது ஒவ்வொரு முகவருக்கும் படிப்படியாக பாலின் அளவு குறைக்கப்பட்டு, தற்போது மிக அதிகபட்சமாக 300 லிட்டர், 250லி, 200லி, 150லி, 100லி என பால் அளவு குறைக்கப்பட்டுள்ளது. எங்கள் தொகை கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் பால் விற்பனை குறைந்து எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பாலில் பெருமளவு தலைநகர் சென்னைக்கு அனுப்பப்படுவதால் திருச்சி முகவர்களுக்கு போதிய பால் அளிக்க இயலவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் காரணமாய் முகவர்கள் மட்டுமல்லாது நுகர்வோரும் கடுமையான பால் தட்டுப்பாட்டில் சிக்கித்தவிக்கின்றனர். இந்நிலையில் பால் தட்டுப்பாடு குறித்து எங்களிடம் தான் புகார் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் முகவர்கள் தவிக்கின்றனர். பால் அளவு குறைக்கப்பட்டதால், முகர்வர்களுக்கு கிடைக்கும் குறைந்த அளவு கமிஷன் தொகை என்பது அவரவர் தகுதிக்கேற்ப ரூ.3000, ரூ.8000 மற்றும் ரூ.10000 என நஷ்டமடைந்து வருகிறோம். இதனால் முகர்வர்களாகிய நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். எனவே போர்க்கால அடிப்படையில், நம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பால், மாவட்ட மக்களின் தேவையை முழுமையாக தீர்க்கப்பட்ட பிறகே மற்ற இடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.
எனவே முகவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கும் சிக்கலையும், நகர்வோருக்கு ஏற்பட்டிருக்கும் பால் தட்டுப்பாட்டை தடுக்கம் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதே போன்று நுகர்வோர்கள் தங்கள் குறைகளை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு தெரிவிக்க வசதியாக, காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், ரேசன் பொருட்கள் பெறுவது தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் போன்று, மாதந்தோறும் ஆவின் பால் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தி நுகர்வோர் மற்றும் முகர்வகள் குறைகளை களைய வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தள்ளோம் என தெரிவித்தனர்.
