வாலாஜாபாத், ஜன.19: வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காடு ஊராட்சியில் மின்விளக்கு இல்லாமல் ஆபத்தான நெடுஞ்சாலை வளைவால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. இதானல், வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காடு ஊராட்சியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் பல நூற்றாண்டு பழமையான எல்லையம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் காஞ்சிபுரம், சென்னை, தாம்பரம், பெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பஸ், கார், வேன் உள்பட பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
மேலும், ஊத்துக்காடு சாலை வழியாக புத்தகம் நாயக்கன்குப்பம், சிங்காடிவக்கம், சின்னிவாக்கம், மருதம், கரூர் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகிறார்கள். ஆனால், ஊத்துக்காடு சாலையின் இருபுறமும் செடி கொடிகள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. இதனால், இரவு நேரங்களில் சாலை இருப்பதே தெரியாத நிலை உள்ளது. இதையொட்டி, அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக பைக்கில் செல்வோர், படுகாயம் அடைவது வாடிக்கையாக உள்ளது.