திருவண்ணாமலை, ஜன.14: திருவண்ணாமலை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்வதற்கான 2வது கட்டமாக 2,372 மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 23ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் வாக்காளர்களின் பெயர், முகவரி திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட மாற்றங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் ஜனவரி 4, 5ம் தேதிகளில் முதல் கட்டமாகவும், ஜனவரி 11, 12ம் தேதிகளில் 2வது கட்டமாக தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாடி மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2,372 மையங்களில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் முதல் கட்டமாக கடந்த வாரம் நடந்தது.