ஆர்.எஸ்.மங்கலம், ஜன. 14: ஆர்.எஸ் மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும், முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் அதிகம் படிக்கும் பள்ளியாக அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. பள்ளியின் தரத்தை மேம்படுத்தும் விதமாக பள்ளி நிர்வாகமும், முன்னால் மாணவர்கள் சங்கமும் இணைந்து பல்வேறு சேவை களை செய்து வருகின்றது. அதேபோல் நேற்று சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பொதுமக்களும் உணர்த்தும் விதமாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளியின் தலைமையாசிரியர் ஐன்ஸ்டீன் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் சசிக்குமார், அப்பாஸ், பகுருதீன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் சங்கத்தினர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், மாணவர்கள் இணைந்து பொங்கலை சமைத்து மகிழ்வுடன் கொண்டாடினர். முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பொங்கல் வாழ்த்துக் கூறி பேசினர். பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தினருக்கு கண்ணை கட்டி பானை உடைக்கும் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு பொங்கலும் கரும்பும் வழங்கப்பட்டது. இறுதியில் ஆசிரியர் ஞானசேகரன் நன்றி கூறினார்.