பட்டிவீரன்பட்டி, ஜன. 10: நாளை மறைமுக தேர்தலையொட்டி ஆத்தூரில் அடுத்த ஒன்றிய தலைவர் யார் என கட்சியினர், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஜன. 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனே வெற்றி சான்றிதழ் மற்றும் பதவி ஏற்பதற்கான கடிதமும் வழங்கப்பட்டது.
அதன்படி கடந்த ஜன.6ம் தேதி ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சிலர்களுக்கான பதவி ஏற்பு விழாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் பதவி ஏற்று கொண்டனர். இந்நிலையில் நாளை ஜன. 11ம் தேதி ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. ஆத்தூர் ஒன்றியத்தில் 17 கவுன்சிலர்களில் 12 திமுக கவுன்சிலர்களும், 3 அதிமுக கவுன்சிலர்களும், 2 சுயேட்சை கவுன்சிலர்களும் உள்ளனர்.