ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் 4688 பயணிகளுக்கு ₹19.96 லட்சம் அபராதம்

சேலம், ஜன. 10:சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 4 ஆயிரத்து 688 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து ₹19.96 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இயங்கும் ரயில்களில், டிக்கெட் இன்றி பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கோட்ட மேலாளர் சுப்பாராவுக்கு புகார்கள் வந்தது. இதன் பேரில், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் பயணச்சீட்டு பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர்அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் ஜோலார்ப்பேட்டை மார்க்கத்தில்  அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்களில் டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில், டிக்கெட் இன்றி பயணம் செய்த 58 பேர்  சிக்கினர். இவர்களிடம் இருந்து ₹82 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் கூறுகையில், ‘பொங்கல் பண்டிகையொட்டி,  முறைகேட்டை தடுக்க 36 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.   சேலம் கோட்டத்தில் கடந்த மாதம் நடத்திய சோதனையில், டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்களிடம்  இருந்து ₹16.70 லட்சம் வசூலிக்கப்பட்டது. ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது தண்டணைக்குரியது. அவர்களிடமிருந்து இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதுடன் ஓராண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்,’ என்றார்.

Related Stories: