கோவை, ஜன. 10: கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பூட்டு போட மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவை அரசு மருத்துவமனைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால், மருத்துவமனை வளாகம் பகல் நேரத்தில் பரபரப்பாக காணப்படும். நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் தங்களின் வாகனங்களை மருத்துவமனையின் நுழைவு வாயில் பகுதியில் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களில் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரிக்க துவங்கியுள்ளது. ரயில் மூலம் வெளியூருக்கு பணிக்கு செல்லும் பலர் பைக்குகளை மருத்துவமனை வளாகத்தில் பார்க்கிங் செய்து விட்டு செல்வதும் தெரியவந்துள்ளது. இது போன்று நிறுத்தப்படும் வாகனங்களின் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் இடநெருக்கடி ஏற்படுகிறது. இந்நிலையில், அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு பூட்டு போட மருத்துவமனை நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.