செய்யூர், ஜன. 10: செய்யூர் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் எல்லையம்மன் கோயில் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. இந்தப் பேருந்து நிறுத்ததிற்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து பேருந்துகளை பிடித்து பயணம் செய்து வருகின்றனர். இங்கு பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்காக பயணிகள் நிழற்குடை கடந்த பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 5 வருடங்களுக்கு முன் கிழக்கு கடற்கரை சாலை விரிவுபடுத்தும் பணியின்போது, இந்த பயணிகள் நிழற்குடை இடிக்கப்பட்டது. அதன்பின் அங்கு புதிய நிழற்குடை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவில்லை. மேலும், சாலை விரிவாக்கத்திற்கு பின்னர் பயணிகள் நிழற்குடை அமைந்திருந்த இடம் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிய பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. இதனால் தற்போது நிழற்குடை இல்லாமல் இங்கு வரும் பயணிகள் கடும் வெயிலிலும், மழையிலும் ஒதுங்க இடமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.