புதுச்சேரி, ஜன. 10: புதுவை, சேதராப்பட்டு அருகிலுள்ள துத்திப்பட்டு கல்லறை வீதியை சேர்ந்தவர் குறளரசன் (23). ரவுடியான இவர் மீது கொலை, வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு வழக்கில் காலாப்பட்டு சிறையில் இருந்த அவர், ஜாமீனில் வெளியே வந்தார். இதனால் ஊரில் மீண்டும் சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே அவரை குண்டாஸில் கைது செய்ய எஸ்பி சுபம் கோஷ் உத்தரவின்பேரில் எஸ்ஐ முருகன் தலைமையிலான போலீசார், மாவட்ட நிர்வாகத்திடம் பரிந்துரைத்தனர். அதை ஏற்று ரவுடி குறளரசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து தலைமறைவாக உள்ள ரவுடி குறளரசனை கைது செய்யும் நடவடிக்கையில் சேதராப்பட்டு காவல்துறை தீவிரமாக இறங்கியுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்படும் பட்சத்தில் ஓராண்டுக்கு அவர் ஜாமீனில் வெளியே வர முடியாத நிலை ஏற்படும்.