தென்காசி, ஜன. 9: தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழியர்களின் வருமானவரி உச்சவரம்பை ரூ.7 லட்சமாக உயர்த்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர், எம்ஆர்பி செவிலியர்கள் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது.