ஓசூர், ஜன.8: ஓசூரில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி துவங்கியது. ஓசூர் பழைய நகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா நேற்று நடைபெற்றது. புதுடில்லி தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பசுமை வேலைக்காக திறன் மேம்பாட்டு மையம், ஓசூர் மாநகராட்சியுடன் கோவை நேர்டு தொண்டு நிறுவனம் இணைந்து 5 நாட்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டது. பயிற்சியை மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி பயிற்சியை துவக்கி வைத்து பேசினார்.அப்போது அவர் பேசியதாவது: ஓசூர் மாநகராட்சியை சுத்தமாக வைத்திருக்க துப்புரவு பணியாளர்களின் பணி மகத்தானது. அவர்களது பணி மேலும் சிறக்கவும் அவர்களது ஆரோக்கியம் மேம்பாட்டிற்கு என கையுறை முகத்திரை மற்றும் பிரதி பலிப்பு அங்கி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படும். 5 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி அடுத்த மூன்று மாதங்களில் 470 தற்காலிக பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும். என்றார்.