நெல்லை, ஜன. 8: நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 10ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் சிறிய அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த வாரம் வருகிற 10ம் தேதி காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடக்கிறது. இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாக வந்து தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். தனியார் வேலைவாய்ப்பு முகாமில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம்.