புதுச்சேரி, ஜன. 8: புதுவை அரியாங்குப்பத்தில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட டுடோரியல் மாணவி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதில் சந்தேகிக்கப்பட்ட ரவுடியை மற்றொரு வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி, அரியாங்குப்பத்தை சேர்ந்த 17 வயது மாணவி புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள ஒரு டுடோரியல் சென்டரில் ஸ்போக்கன் இங்கிலீஷ் படித்து வந்தார். கடந்த 2ம்தேதி அங்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்தார். அதில், புதுச்சேரி, பெரியார் நகரில் வசிக்கும் ரிஷி என்ற ரிஷிகுமார் (21) என்பவர் தனது மகளை கோட்டமேடு பஸ் நிறுத்தத்தில் இருந்து கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறியிருந்தார்.