திருச்சி, ஜன.7: திருச்சியில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கிராம ஊராட்சி வார்டு உறுப்பனர்கள் 3,397, கிராம ஊராட்சி தலைவர் 403, ஒன்றிய கவுன்சிலர்கள 241, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் 24 பேர் என மொத்தம் 4,065 பேர் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த டிச.27, 30 ஆகிய இரண்டு நாட்கள் நடந்தது. திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், முசிறி, தொட்டியம், துறையூர், தா.பேட்டை, உப்பிலியபுரம் ஆகிய 14 ஒன்றியங்களில் 3,408 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 404 கிராம பஞ்சாயத்து தலைவர், 241 ஒன்றிய கவுன்சிலர், 24 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் என மொத்தம் 4,077 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கான பதவியேற்பு விழா அந்தந்த ஒன்றியங்கள், பஞ்சாயத்து அலுவலகங்களில் நேற்று நடந்தது.