மஞ்சூர், ஜன.7:மஞ்சூர் அருகே உள்ளது குந்தா பாலம். 800கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் இப்பகுதியில் வரலாறு காணாதவகையில் கனமழை பெய்தது. இந்த மழையில் குந்தாபாலத்தில் உள்ள பன்னிமேடு, மேட்டுச்சேரி பகுதிகளில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தது. குடியிருப்புகளுக்கு முன் மற்றும் பின்புறங்களில் பெரிய அளவில் மண்சரிவுகளும் ஏற்பட்டது. தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள மனமகிழ் மன்ற கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்டனர். மேலும் விடிய, விடிய பெய்த அடைமழையில் குந்தாபாலம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. புல்மைதானத்தின் ஒரு பகுதி அடியோடு பெயர்ந்தது. மழை நின்ற பிறகும் அப்பகுதியில் தொடர்ந்து ஊற்றுநீர் வெளியேறி மண் அரிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் கோயில் வளாகமே முற்றிலுமாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டதுடன், மீண்டும் பலத்த மழை பெய்யும் பட்சத்தில் மேலும் மண் அரிப்பு ஏற்பட்டு கீழ்புறம் உள்ள வீடுகளும் பாதிக்கும் அபாயம் உள்ளது.