கொடைக்கானல், டிச. 31: பள்ளி, கல்லூரி விடுமுறை மற்றும் புத்தாண்டை கொண்டாடுவதற்காக கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் அதிகளவு குவிந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் நேற்று அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் குவிந்தனர் . முதற்கட்ட ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தேர்தல் முடிந்த காரணத்தினால் அந்த பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு வந்தனர் கடந்த சில தினங்களாகவே கொடைக்கானல் சுற்றுலாப்பயணிகளின் வருகையால் திக்குமுக்காடி வருகிறது. தற்போது குளிர் சீசன் நிலவுவதால் இதனை அனுபவிப்பதற்காகவும் சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், க்ரீன் வேலி வியூ எனப்படும் தற்கொலை முனை, தூண் பாறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப்பயணிகளின் தலைகளாகவே தெரிந்தது.