மஞ்சூர், டிச.30: உள்ளாட்சி தேர்தலையொட்டி எல்லையோர கிராமங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் ஓட்டுப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி அமைப்புகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு முதற் கட்டமாக குன்னூர், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 27ம் தேதி நடைபெற்றது. இதை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக ஊட்டி, கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. மஞ்சூர் அருகே உள்ள குந்தா, முள்ளிகூர், பாலகொலா உள்ளிட்ட ஊராட்சிகளுக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் நேற்று ஓட்டுப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.