நெல்லை, டிச.27: நெல்லை மாநகர போலீசார் முறையாக விசாரணை நடத்தாமல் இளைஞர்கள் மீது பொய்வழக்கு போடுவதை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தேவர் சமுதாய அமைப்பினர் மனு அளித்தனர். அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக்கழகம் மூர்த்திதேவர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் இசக்கிராஜா, நேதாஜி சுபாஷ் சேனை மகாராஜன், தமிழ்நாடு தேவர் பேரவை கார்த்திக், அகில இந்திய பார்வர்டு பிளாக் ராம்குமார் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாநகர போலீசார் எங்களது இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வதை கண்டித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தை நேற்று காலையில் திடீர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.